Friday, July 30, 2010

இதயம் துடிக்க மறந்த நொடிகள்..இதோ..

பெண் தேடி போனேன்..
அவள் அழகானவளா என்பதற்கல்ல..
அவள் என்னவளா என்பதற்காக..
பேசிப்பார்த்துவிட்டு வந்தேன்..
அவள் குணம் அறிய அல்ல..
என்னை பிடித்திருக்குமா என அறிய..
இதழ் மலர்ந்து..
இமை அடைத்து..
இறுமாப்பு துறந்து..
இதயம் படபடக்க..
இன்சொல் கேட்டேன்..
இவனை "பிடுச்சிறுக்கு"….
இதயம் மொத்தமாய் துடிக்க மறந்தாலும்
இனி இவள் மடிதான்......
- குட்டி

நடுநிசி நச்சுகள்-உறுத்தல்கள்- குட்டி

பொள்ளாச்சியின் ஒரு தனியார் மருத்துவமனை, அந்த நடுநிசி 2 மணியை லேசான சிறு துளிகள் நனைத்து ரம்யமாக வைத்திருந்தது. வராண்டாவை தவிர்த்து பெரும்பாலான அறைகளின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது.
நெங்சு வலி வந்த பெரியவருடன் உள்ளே நுழைந்த உறவினர்கள் அந்த மருத்துவமனையின் அமைதியை குழைத்து ரகளையில் இறங்கியிருந்து. "டேய் உடனே ரமேஷ் டாக்டர கூப்பிடுங்கடா, என் பேர சொல்லுங்கடா அவருக்கு தெரியும்"என யாரோ ஒருவர் பணி மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வந்த ஈ.சி.ஜி ரிப்போர்ட் அது "ஹார்ட் அட்டாக்" என்பதை உறுதி செய்திருந்தது. கூடவே இருதய துடிப்பும் , இரத்த அழுத்தமும் மிக குறைவாய் இருப்பதை உணர்ந்த மருத்துவர் " சார் இவருக்கு இங்கு முதலுதவி மட்டுமே செய்ய முடியும். மேற்சிகிச்சைக்கு கோயம்புத்தூர் தான் செல்ல வேண்டும்" என கூற வந்தவர்கள் ரகளையை அதிகபடுத்தியிருந்தனர்.
நோயாளிக்கு இருதய வலிக்கான மாத்திரைகள் கொடுக்கப்பட்டு, வாந்திக்கான ஊசி போடப்பட்டு ஆம்புலன்சில் கோயம்புத்தூருக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவர்கள் கோயம்புத்தூர் செல்லாமல் அருகிலிருந்த இன்னொரு மருத்துவமனையில் பிரச்சனையை புதிதாக ஆரம்பித்திருந்தனர். அடுத்த ஆஸ்பத்திரி போகும் வரை அமைதியாயிருந்த அந்த கும்பல் நோயாளியை இறக்கியவுடன் ஆம்புலன்சு டிரைவரிடம் "நோயாளி இறந்தா காலையில் உங்க ஆஸ்பத்திரி மேல கல் எறியறோம் பாருங்கடா" என சத்தம் போட, கடுப்பான டிரைவர் "வந்து எறிஞ்சு பாருங்கடா"என கூறிவிட்டு சவாரிக்கான வாடகை கூட வாங்காமல் கிளம்பினார்.
இந்த பிரச்சனையை பார்த்துக்கொண்டிருந்த இரண்டாவது மருத்துவமனை ஊழியர்கள் அந்நோயாளியை கோயம்புத்தூர் அனுப்ப தயாராகிக் கொண்டிருந்தனர்.
நிதர்சனங்கள்:-
1) அட எல்லா டாக்டரும் மனுசங்கதான்யா! அவங்க தூங்க வேண்டாமா?அவசரத்திற்கு வேற டாக்டர்கிட்ட வைத்தியம் பாக்க மாட்டங்களோ!! பார்த்த டாக்டரே அவ்ர் இருதயநோய் மருத்துவத்தில் தனியாக பயிற்சி பெற்றவர் என கூறியும் நம்பிக்கை இல்லை!
2) தண்ணி போட்டுட்டு வந்து அராஜகம் பண்ணினா, உடனே பயந்து நடுங்கி வைத்தியம் பாக்கணுமா?[ லொள்ளு பண்றவங்களுக்கு எந்த மருத்துவமனையும் வைத்தியம் பண்ண முன் வராது! நமக்கு எதுக்கு பிரச்சனைனு!]
3) இந்த நச்சுகளின் தொந்தரவை தவிர்க்கவே பெரும்பாலான மருத்துவமனைகள் இரவில் நோயாளிகளை உள்ளே கூட விடுவதில்லை.
4)மக்கள் படம் பார்த்து, பேப்பர் படிச்சு ரொம்பவே கெட்டு போய்ட்டாங்கப்பா! எல்லா மருத்துவமனைகளும் காசு புடுங்கறாங்கன்னு கெளப்பிவிட்டதால எவனுக்கும் எந்த டாக்டர் மேலயும் நம்பிக்கையில்லை!(நம்பாமல் போனா நஷ்டம் ஒண்ணும் டாக்டருக்கு இல்லயே!). இனிமே மக்கள் படத்தோட இயக்குனர்கிட்டயும் , நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டர்கிட்டயும் வைத்தியம் பாத்துக்கோங்கப்பா![அட பாவிகளா நாங்க தியேட்டர் போய் படம் பார்த்து பல நாட்கள் ஆச்சே!]

மொத்தத்தில் நடுநிசி நச்சு
* அது மருத்துவரை பொறுத்தவரை இது போன்ற நோயாளிகள்
* அது நோயாளியை பொறுத்தவரை மருத்துவர்கள். வெளங்கிடும் இந்த நாடு....

Wednesday, June 9, 2010

நேர்மை என்னும் எதிரி - சிறுகதை - குட்டி




புதிதாக பதவியேற்று அரசுமருத்துவ அதிகாரியாக அந்த ஊருக்குள் நுழைந்த குமாருக்கு வயது 27. அவருக்கு அவரது நண்பன் கூரிய அறிவுரை " உனக்கு கீழ் வேலை பார்க்கும் யாரையும் கண்டிக்காதே, அவர்கள் எல்லோரும் அதே ஊரில் பல வருடங்கள் பணியில் இருப்பார்கள். நீ கண்டிப்புடன் இருந்தால் உன் மீது அரசாங்கத்திற்கு மொட்ட கடுதாசி போட்டு தொல்லை கொடுப்பார்கள்". அது அறிவுரை என்பதை விட, அது அவரது அனுபவம் என்பதே சரியான வார்த்தை. நேர்மையை அதிகம் நம்பி 27 வருடங்களை கடந்த குமாருக்கு நண்பனது அனுபவம் கவலை தரவில்லை.
இந்த மருத்துவமனையில் நிறைய மாற்றங்கள் தேவை என்பது முதல் மாதத்திலேயே தெரிந்தது. மாற்றத்தின் முதல்படி வருகைபதிவேட்டை சரியாக கையாள்வது. தினமும் எல்லா அறைகளையும் சுற்றி வந்த அந்த வருகை பதிவேடு மருத்துவரின் அறைக்குள் அடைக்கலம் புகுந்தது.அத்துடன் மருத்துவ சான்றிதல்களுக்கு வாங்கப்பட்டு வந்த பணம், பிரசவத்திற்க்கு வாங்கப்படும் பணம், ஊசி மற்றும் குளுக்கோசுக்கான பணம் என எல்லாம் நிறுத்தப்பட்டது. குசு குசு என மற்ற ஊழியர்கள் பேசி கொள்வதை குமாரல் உணர முடிந்தது. இரண்டாவதாக மருத்துவமனைக்கு தண்ணீர் விடுவதற்கு பணம் கேட்கும் அந்த பஞ்சாயத்து ஊழியரை ஊர் தலைவர்களிடம் சொல்லி கண்டிக்க, அதுவும் சரி செய்யப்பட்டது.
இரண்டு வாரங்கள் எல்லாம் சரியாக நடந்தது. மூன்றாவது வாரம் மேலதிகாரியின் திடீர் சுற்றுப்பார்வை அந்த மருத்துவமனையில். எல்லாம் சரியாக இயங்கியும் பல தவறுகளை சுட்டி காட்டிய மேலதிகாரி, குமாரை அடுத்த நாள் விளக்கமளிக்க வேண்டினார்.
மேலதிகாரியின் அலுவலகத்தில் குமாரின் நேர்மை விலைபேசப்பட்டது, குமார் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது. அடுத்த நாள் முதல் முன்னர் இலவசமாக வாங்கப்பட்டு வந்த மருத்துவச்சான்றிதல்களுக்கு நூறு ரூபாயாக விலை நிர்ணயக்கப்பட்டிருந்தது.

Wednesday, May 26, 2010

கருச்சிதைப்பு - குட்டி


சுகம் பெற்று
சுகம் கொடுத்த
ஆண், பெண் இருவருக்கும்
எங்கே போனது அறிவு?
தவறிழைத்த அவர்கள்
தலைநிமிர்ந்து, கண் திறந்து
உலகை நோக்க!
உலகமறியாத, கண்திறக்காத,
தலைநிமிராத என்னை ஏன்
கருவறையில் கறி கத்தரிக்காயாய் சிதைத்துவிட்டீர்!
காமம் என்ற கள்ளத்தனத்துக்காக!
ஆணுறையிட்டிருந்தால் என்
சாபம் உனக்கில்லையே!
அரசாங்கம் அறிவித்திருக்கிறதாம்
நீங்களும் சிதைபடுவீர்! சிறைக்குள்ளே!
அது மருத்துவனானாலும் மானுடனானாலும்
மன்னிப்பதற்கில்லையாம்!!
      - குட்டி

Tuesday, May 18, 2010

லட்சியம் - சிறுகதை-குட்டி

லட்சியம் - சிறுகதை-குட்டி

செந்தில் ஒரு பழமையின் ரசிகன், பழமைவாதி. எப்போதும் மிக பழைய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பவன்.
அவனிடம் ஒரு நல்ல கார் இருந்தும் வழக்கம் போல் ஒரு மிக பழைய கயலான் கடை காரை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டான். அது பிரச்சனை இல்லாமல் ஓட வாங்கிய விலையை விட இருமடங்கு செலவு செய்தான். அவனது நண்பர்கள் அவனது காரை ஓட்டி பார்க்க வாங்கிய போது வெளியில் நின்றதில் பட்ட குறை, புகை சிறிது அதிகமாகவே வந்தது.
காற்றை மாசு படுத்துகிறோமோ? என மெக்கானிக்கிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் என்னவோ செய்து விட்டது "நீங்கள் ஒருவர் மட்டும் இதை யோசித்து பிரயோசனமில்ல மற்றவர்களும் இத யோசிக்கனும், ஏன் நீங்க உபயோகிக்கிற கம்பியூட்டர், ஏ.சி, பேன், லைட் கூடத்தான் உலகம் மாசு பட்டதுக்கு காரணம்னு சொல்றாங்க.இந்த பழய காரை நீங்க எப்போவாவது தான் உபயோகிக்க போறீங்க ஆனா பேன், லைட், ஏ.சி, கம்ப்யூட்டர் தினமும் உபயோகிக்க போறீங்க, அத மொதல்ல கொறங்க தம்பி." உலக வெப்பமடைவதில் தனக்கும் ஒரு பங்கு இருப்பதை உணர்ந்தான். மெக்கானிக்கிடமிருந்து காரை எடுத்து செல்லும் வழியில் மரங்கள் ஏற்றபட்ட ஒரு லாரியை கடந்த போது அந்த லாரி உறுமிய புகை அவனது காருக்குள் நிறைந்த்திருந்தது.
அந்த புகை வாசம் மறைவதற்குள், அந்த மூச்சுதிணறல் அட்ங்கும் முன் அவனது கார் விவசாய கல்லூரி வாசலில் நின்றது. பழம் தரும் மரகன்றுகள் நூறை வாங்கி காரில் எடுத்து சென்று அவனது கிராமத்தில் எல்லோருக்கும் கொடுத்தான், இதே வகையில் மாதம் நூறென இந்த வருடத்தில் ஆயிரம் கன்றுகளாவது தன் பங்கிற்கு நட்டுவிட வேண்டும் என்ற லட்சியத்துடனும், தன் "பழைய" லட்சியங்களை விட்டு விடாமலும் .

Monday, April 26, 2010

விலங்குகளும் -விளங்காதவைகளும்!

கடல் கடந்து கப்பம்
கட்டுகிறானாம் தமிழன்
தன் சொந்த நாட்டிலேயே!
வீர வணக்கத்திலும்
விஷம விளையாட்டு!
வெட்கங்கெட்டவர்கள்!
நாம் என்ன செய்ய முடியும்?
இது தான் என் மக்களின் கேள்வி !
ஆயிரம் ஆயிரம் பிணங்கலாம் ஈழத்திலே!
இங்கோ நாற்காலி சண்டை!
மவுனம் காக்கும் மேலை நாடுகள்!
இறந்தவன் கிருத்துவனோ முஸ்லிமோ இல்லையாம்!
இறந்த எங்கள் தமிழர்கள் விலங்குகளை விட கேவலமா?
ப்ளூ கிராஸ் கூட வாய் திறக்கவில்லையே!
மனம் உடைந்து தற்கொலையாம்!
அதற்கு அரசு பணமாம்!
இறந்தவனுக்கு பணம் எதற்கு!
தற்கொலை காரணத்திற்கு முடிவில்லாமல்!

- குட்டி

தனுஸ்கோடியின் கடற்காற்று




ஓங்கி அடித்தாலும் அந்த உப்பு காற்றுக்கு
ஒரு சுகமுண்டு அந்நாளிலே!
தென்றலாய் இருந்தும் அதில் வந்த வாடையில்
ஏனோ தமிழன் முகம் கோண!
வந்த வாடை என்ன கருவாட்டு வாடையா? அல்லவே!
அது சுகமான சுமையன்றோ!
எங்கள் ஊரில் நோய்பட்ட இலவொன்றும்
அண்மையில் இல்லையே!
காற்றின் திசையில் கடல் தாண்டி
தமிழன் கனவு தனி ஈழமோ! சிதைக்கப்பட்ட பிண ஈழமாய்!
சிதைக்கப்பட்டது தமிழன் என்னும் அப்பாவியின்
கனவு மட்டுமல்ல! பிணமும் தான்!
சிதைபட்ட பிணங்களுக்குள் தமிழன் அங்கே!
தன் இனத்தின் பிணவாடை கூட அறியாமலும்
சில தமிழர்கள் இங்கே!
-குட்டி

ஆசிரியர் - சிறுகதை – குட்டி

பல நாட்கள் கழித்து தான் படித்த கல்லூரியிலேயே புரபசர் பதவியில் கல்லூரிக்குள் நுழைந்த சந்தோசத்தில் கல்லூரியை அந்த மாலை நேரத்தில் சுற்றி பார்க்க கிளம்பினான் ராஜா.ஆனால் எதோ நெருடல் மனதில் இருந்து கொண்டே இருந்தது. மாணவனாய் இவனையும் இவனது நண்பர்கள் பற்றியும் மொத்த கல்லூரியும் அறிந்த விசயம், ஒரே வார்த்தையில் சொன்னால் முரடர்கள்.
அந்நாள் ஒரு மாலை தன்னுடய நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் நிற்கையில் அவ்வழியே சென்ற அவனது ஆசிரியர் அவர்களை பார்த்து பேசிய வார்த்தைகள் "இந்த கல்லூரிய சுத்துன கழுத எங்கயும் போகாதாம்- போய் பொழைக்கற வழிய பாருங்கடா".பேசிய வார்த்தைகள் பொறுக்காமல் அவரை பழி தீர்க்க அன்றிரவே அவரது விடுதி அறையில் தீ வைத்து விட்டு, அவரை அடுத்த நாள் அதே இடத்தில் கேலி செய்தது ஞாபகம் வந்தது. “மன்னிப்பு என்பதே கிடையாது வாத்தி” எனக்கூற அவரோ கூனி குறுகி போனார். சொல்ல முடியாத வேதனையில் அவர் தவித்ததை பார்த்து பார்த்து ரசித்தவர்கள் இவர்கள். ஆனால் இன்றோ அதே கல்லூரியின் புரபசராக புன்முறுவலோடு வாழ வேண்டிய கட்டாயத்தில் அந்த பழைய மாணவனும்.

சூரிய உதயத்தை பார்த்து பல வருடங்கள் கடந்திருந்தது. வாழ்க்கையின் கட்டாயம் செய்த கோலம், அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு இன்றே தயாராக வேண்டி இருந்தது அதிகாலையில். ஆசிரியர்களின் வகுப்புகளை புறகணிப்பதும், கிண்டல் செய்வதும், வகுப்புகளை பாதியில் நிறுத்துவதும் பொழுதுபோக்காய் இருந்த அவனுக்கு தற்போதய இடம், பொருள், ஏவல் எல்லாம் உறுத்தியது. எப்படி வாழ்ந்தவன் நான் இந்த கல்லூரியில் ராஜாவாய், மந்திரியாய், பெண்களின் கதாநாயகனாய். ஆனால் ஏதோ உறுத்தியது கண்டு பிடிக்க முயற்சித்தும் முடியாமல்.
அன்று அவன் நடத்த வேண்டிய பாடம் "வாழ்க்கையில் முன்னேற கடைபிடிக்க வேண்டிய விசயங்கள்"என்ற தலைப்பில். நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என துவங்கி பொரியவர்களை எந்த அளவு மாரியாதையுடன் நடத்த வெண்டும் என்பது வரை அரை மணி நேரம் பேச, வழக்கமான மாணவர்கள் வழக்கம் போல் பேசி கொண்டும், சிரித்து கொண்டும், ஆசிரியரை கிண்டல் செய்வதுமாய் இறுக்க. கோபம் கொப்பளிக்க, உதடுகள் முனக முயற்சிக்க கட்டுப்படுத்தியவனாய் தனது அழைப்பு துண்ட்டிக்கபட்ட செல்பேசியுடன் மன்னிப்பு கேட்டு வகுப்பின் வெளியே சென்றான். தனது உறுத்தலுக்கு பதில் கண்டவனாய் வகுப்பறைக்குள் ஒரு தெளிர்ச்சியுடன் நுழைந்தான். ஞான ஒளி பெற்றவனாய் அடுத்த ஐந்து நிமிடங்கள் பேசிய விசயம் " வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நாளை வரும் பிரச்சனைகளை இன்றே அறிய வேண்டும்,அதற்கு எந்த ஒரு மனிதனுக்கும் பதில் கூறும் முன்னும் அவர்களுக்கு கட்டளைகள் இடும் முன்னும் அவர்களது ஸ்தானத்தில்(இடத்தில்) இருந்து யோசித்து செயல்பட வேண்டும்"என உணர்ந்தவனாய் பேசி வகுப்பை முடித்துக்கொண்டான்.
பலவருடங்கள் படித்த கல்லூரி பாடம் தராத அறிவை அவனுக்கு வழ்க்கை பாடம் தந்திருந்தது. வகுப்பு முடிந்து கிளம்பும்போது ஒரு சந்தோசம் வந்திருந்தது. நேரமே கல்லூரியில் இருந்து கிளம்பினான் அவனது ஆசிரியரை பார்த்து மன்னிப்பு கேட்பதற்காகவும், பல வருட மன உறுத்தலை மறப்பதற்காகவும்.

Saturday, January 2, 2010

மறப்பதும் மன்னிப்பதும்

மறப்பதும் மன்னிப்பதும்
மனிதநேயம் என்றோம்!
நாங்கள் கூறியது தவறை,
நீங்கள் மன்னித்து
மறந்துபோனது மனிதனை!!
-குட்டி

மனிதநேயம்


மனிதநேயம் மரத்துப்போன மனிதமும்
மனித நேயம் மறந்து போன மனிதனும்
பொறாமை மிகுந்து போன கூட்டமும்
பொறுமை இழந்து போன தலைவனும்
எந்நாட்டின் சொத்தெனில் யாரிவர்கள்
மடமையை பறித்தெடுத்து காட்டுவர்?

சிறான் முதற் கிழாற் வரை
சுயநலமெனும் சூழ்ச்சியே மூச்சு எனில்
சிற்றெறும்பை காப்பாற்றும் சிறந்தானை
சல்லடையாய் சலித்தாலும் சந்தர்ப்ப
சூழ்நிழையால் சந்திப்பேனா? இது ஒரு சாபக்கேடா?

மடமை போற்றும் களைகளினுள்
மனிதமொன்று கண்டேன் குற்றுயிறும் குழையுயிறுமாய்
மண்ணைவிற்று பொன்னை விற்று என்
மனதின் மனிதநேயம் காப்பாற்றுவேன்!
அட நண்பரே! அது உன்னுள்ளும் அதே நிலையில்!
அடை காக்கும் கோழியாய் உயிரிட்டு காப்பாயா?
உன் சந்ததிக்கும் அதை காட்டிடுவோம்!
வரலாற்று சின்னமாய்!
                -        குட்டி